சர்வதேச கிரிக்கெட் நிர்வாகம் ஐ.சி.சி. இருபதுக்கு - 20 போட்டிகள் சமநிலையில் முடிந்தால் கடைபிடிக்கப்படும் சூப்பர் ஓவருக்கு புதிய விதிமுறைகளை அறிமுகப்படுத்தியுள்ளது.
இங்கிலாந்தில் - நியூசிலாந்து அணிகளுக்கு இடையில் நடைபெற்ற உலக கிண்ண இறுதிப் போட்டி சம நிலையில் முடிந்தது. இதனால் சூப்பர் ஓவர் முறை கடைபிடிக்கப்பட்டது.
சூப்பர் ஓவரும் சம நிலையில் முடிந்ததால் பவுண்டரிகள் அடிப்படையில் இங்கிலாந்து வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.
இதனால் ஐ.சி.சி. கடும் விமர்சனத்திற்கு உள்ளாகியது.
எனவே ஐ.சி.சி. தற்போது விதிமுறைகளை மாற்றியுள்ளது.
இருபதுக்கு - 20 போட்டிகளுக்கான இந்த சூப்பர் ஓவர் புதிய விதிமுறைகளானது இங்கிலாந்து - தென்னாபிரிக்க மற்றும் தென்னாபிரிக்க - அவுஸ்திரேலிய தொடர்களில் அறிமுகப்படுத்தப்படவுள்ளது.
1. போட்டி சம நிலையில் முடிந்தால் சூப்பர் ஓவர் விளையாடப்படும்.
சூப்பர் ஓவரும் சம நிலையானால், தொடர்ச்சியாக முடிவு கிடைக்கும் வரை சூப்பர் ஓவர் விளையாடப்படும். ஒரு ஓவருக்கு 6 பந்துகள் வீசப்படும்.
2. இரண்டு விக்கெட்டுகள் வீழ்ந்தால் ஒரு அணியின் இன்னிங்ஸ் முடிவுக்கு வரும்
3. ஒவ்வொரு அணிக்கும் தலா ஒரு ‘ரிவியூ’ வாய்ப்பு வழங்கப்படும்.
4. சூப்பர் ஓவர் மழை போன்ற காரணத்தினால் நீண்ட நேரமாக நடைபெறவில்லை என்றால் போட்டி கைவிடப்படும்.
5. போட்டியில் 2 ஆவது துடுப்பாட்டம் செய்த அணி சூப்பர் ஓவரில் முதலில் துடுப்பாட்டம் செய்யும்.
6. முதலில் களத்தடுப்பு செய்யும் அணி பந்தை தேர்வு செய்யலாம். 2 ஆவது களத்தடுப்பு செய்யும் அணி அதே பந்தை தேர்வு செய்யலாம். பந்தை மாற்ற வேண்டும் என்று விரும்பினால், போட்டி நடைபெறும் சூழ்நிலை கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும்.
7. களத்தடுப்பாளர்களுக்கு கட்டுப்பாடு போட்டியின் கடைசி ஓவரில் எப்படி இருந்ததோ, அதே போன்று இருக்கும்.
8. சூப்பர் ஓவருக்கான இடைவேளை ஐந்து நிமிடங்கள்.
Lanka Newsweek © 2024